Sunday, October 28, 2018
Saturday, October 27, 2018
Thursday, October 25, 2018
காலிங்கராயன் அணை
காவிரியாற்றின் கிளை நதிகள் பவானி, நொய்யல் ஆகியன. பவானியையும்,
நொய்யலையும் இணைப்பது காலிங்கராயன் கால்வாய். இந்த கால்வாயை வெட்டியதன்
பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. அதே சமயத்தில் இந்த கால்வாய் வெட்டி கொண்டு
செல்லப்பட்டதில் உள்ள தொழில் நுட்பம் பலர் அறியாத விஷயம்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல்.
ஈரோடு மாவட்டமும் காலிங்கராயன் என்ற பெயரும் பிரிக்க முடியாதவை.
மாவட்டத்தின் ஒரு பகுதி முழுவதும் மஞ்சளாக விளைந்து செழிக்க வலுவான காரணம்
காலிங்கராயன் பாசன வாய்க்கால்.
பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பிரியும்
காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ஆண்டில் பத்து மாதங்களுக்கும் மேலாகத் தழும்பத்
தழும்பத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும்.
இந்த வாய்க்காலுக்குப் பின்னால் வெவ்வேறு விதமான வரலாறுகள். வெறும்
கதைகளோ என்றும் எண்ணச் செய்யும் தகவல்கள். ஆனால், மறுக்க முடியாத உண்மை,
தொலைநோக்குடன் இந்தத் தடுப்பு அணையைக் கட்டி வாய்க்காலை வெட்டியவர் –
காலிங்கராயன்.
பவானியில் தொடங்கி நொய்யல் வரை கோணல்மாணலாகச் சென்று, வழியெங்கும் கொங்கு
மண்ணைச் செழிக்கச் செய்கிறது காலிங்கராயன் வாய்க்கால்.
இந்தக் கோணல்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு காரணம் கூறப்படுகிறது.
வாய்க்கால் தொடங்குமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். முடிகிற இடமான
நொய்யலில் 412 அடி. நேர்க்கோட்டில் தொலைவு 50 கி.மீ. இரண்டுக்கும் இடையேயுள்ள மேடு
பள்ளம் காரணமாகத் தண்ணீர் விரைந்தோடிவிடுவதைத் தடுத்து வேகத்தைக் குறைப்பதற்காகவே
இத்தனை கோணல்கள்.
வளைந்து வளைந்து செல்வதால் வாய்க்காலின் நீளமும் சுமார் 90 கி.மீ.யாக
வளர்ந்து, இருபுறமும் பயனடையும் பரப்பும் அதிகரிக்கிறது. அன்றைய தமிழனின்
தொழில்நுட்ப சாதனை!
தற்போது காலிங்கராயன் பாசன வாய்க்காலில் 786 மதகுகளின் வழியே பதிவு
செய்யப்பட்ட 15,743 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. உண்மையில் பதிவு செய்யப்படாத
நிலங்களின் பரப்பும் மேலும் சிலபல ஆயிரங்கள் இருக்கும்.
யார் இந்தக் காலிங்கராயன்? காலிங்கராயனின் கதைதான் என்ன? அறிந்துகொள்ள நமக்குப் பேருதவியாக இருக்கிறது, ‘ஊற்றுக்குழி
பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி’!
இந்த வமிசாவளியில் ஒன்றேபோல இருந்தாலும் இரண்டு பகுதிகள் என்று கூறலாம்.
முதல் பகுதி, காலிங்கராயன் பெயர்க் காரணமும் காலிங்கராயன் வாய்க்கால் உருவான
கதையும். இரண்டாம் பகுதியில் காலிங்கராயன் பரம்பரையில் நேரிட்டதொரு வீழ்ச்சியும்
பின்னர் எழுந்துநின்று நிலைப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வமிசாவளி, அதே தமிழில்...
*
ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன் வமிசாவளி
தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுகா ஊற்றுக்குழி பாளையக்காரர்
காலிங்கராயன் கவுண்டர் என்னப்பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது:
என்னவென்றால்:-
பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர்
பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக
அறுபதுனாயிரம் கோத்திரக்காரர்களில் பிற்காலம் – ரிஷபகிரி – சோழராஜா மகளை முரை
சரிந்த சேர ராஜா பாணிக்கிரஹணம் பண்ணிக்கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி
நாற்பத்தி யெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்த படியினாலே – அப்போ
வரப்பட்ட வேளாளருக்கு – தென்திசை நோக்கி வந்தபடியினாலே – தென்திசை வேளாளரென்று
பேர் வரப்பட்டது.
சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு - சேரனுக்கு கொங்கண ரெண்ணும் பேர்
இருக்கிற படியினாலே – கொங்கு வேளாளரென்றும் – கொங்கு இருபத்தினாலு நாடுயென்றும் –
யேற்படுத்தி இறுக்கும் நாளையில் – அக்காலத்தில் – யென் வம்சஸ்தனான காலிங்க
கவுண்டன் என்கிறவன் பூந்துரைநாட்டுக்கு காணியாள (னுஇ) (னுக்கு) மேல்கரை முப்பத்தி
ரெண்டு கிறாமத்துக்குச் சேர்ந்த – வெள்ளோடு குடியிருப்புக் காரனாயி – தம்முடய இஷ்ட
தெய்வமான – சர்வேஸ்வர பாடகவல்லி நாச்சாற் – தேவஸ்தானம் சீறனேதாரணம்
பண்ணிக்கொண்டிருந்தான்...
பூந்துரை னாட்டுக்கு – னட்டானஇ – வெள்ளோட்டு குடியிறுப்புக் காரனஇ யிருக்கும்னாளையில்
–கங்கை குலம் – சரதந்த கோத்திரம் காலிங்ககவுண்டன்-யென்குங்குர – தன்னுடைய
குமாரனுக்கு – கலியாணம் பண்ண வேணுமென்று நினைச்சு – மாமன் மச்சுனனான –
பண்ணகுலத்தாளி வீட்டுல – பெண் கேட்டு கலியாணம் செய்யத் தக்கதாக யோசிச்சு –பெண்
சம்மதமாகி அந்த றாத்திரி சாப்புடுகுரதுக்கு சமயல் பண்ணுகிறவன் வந்து இவற்களுக்கு
சமயல் பண்ணுகுரதுக்கு யெந்த அரிசி போடுகிறது யென்று கேட்க அவாள் கம்பு வெளயிற
சீற்மையிலே யிருக்கிற பேர்களுக்கு யெந்த அரிசி யென்று தெரிய போகுது பரறசிதானே போடு
போவென்று சொல்ல அதுசேதி மேற்படி காலிங்க கவுண்டன் கேட்டு அவாள் வீட்டிலே சாப்புடாத
படிக்கு இறுந்து நெல்லு வெளையும்படியாக நீர் பாங்கு உண்டுபண்ணிக் கொண்டு உங்கள்
வீட்டுப் பெண் கொண்டு சாப்பிடுகுரோ மென்று செபுதம் கோறிக்கொண்டு வந்துதம் வூருலே
வந்துசேர்ந்து மனதிலே சூடு தோணி இருக்கும் நாளையில் இவர் இஷ்ட தெய்வமான சர்வேஸ்வரரை
தன்னுடைய அபீஷ்டம் சித்த வேணுமென்று நினைச்சுயிருக்குவேளையில் றாத்திரி
சொப்பனத்திலே ஒரு விருத பிராமண ரூபமாய் வந்து இந்தச் சர்ப்பம் போற வளியாக
வாக்கியால் வெட்டி வைக்கச் சொல்லி காரணமாக சொப்பணமாச்சுது அந்த சொப்பன மானவுடனே
கண் முளிச்சு பாற்கும் மிடத்தில் ஒரு சர்ப்பம் பிரதிட்சமாகயிருந்து தான் கண்டு
இருக்கப்பட்ட சொப்பனத்தை கண்டு அறிய வேணுமென்று நினைச்சு வீடு விட்டு வெளிஇலே வந்த
சமயத்தில் சற்ப்பம் இவனைக் கண்டு முன்னே நடந்தது. அந்த சற்ப்பத்தைத் துடர்ந்து
போய் யிந்த வழியாக போகுதென்ரு அடையாளங்கள் போட்டுக்கொண்டு வருகிற போது கொடுமுடி
சேத்திரத்திலே சற்ப்பம் நிண்ணுது.
அந்த சற்ப்பம் போன போக்குலே வாக்கியாலு வெட்டி வைக்க வேணுமென்று னினைச்சு
பவானி ஆத்தில குறுக்க அணை கட்டி வைக்க வேணுமென்கிறதாக நினைச்சு யிருந்த சமயத்தில்
பவானி கூடல் ஸ்தளத்துக்கு மேல் புறத்தில் பவானி யாத்துல சர்ப்பம் குறுக்கே
படுத்துக் கொண்டது. அந்த யிடத்துலே அணைக் கட்டி வைக்க வேணுமென்று பவானி கூடலுக்கே
வடக்கை வூறாச்சி மலையும் தடமும் சுத்த கிறயத்துக்கு வாங்கி அணை கட்டுகிற சமயத்தில்
வெள்ளை வேட்டுவற் யென்ங்குற பாளையக்காரன் அணை கட்டுகுர யெல்லை தன்னதென்று சண்டை
பண்ணின படியினாலே வெள்ளை வேட்டுவரை செயிச்சு அணையும் கட்டி வெகு திரவியங்கள்
செலவளிச்சு சற்பம் போகியிருந்த அடையாளங்களைப் பிடிச்சு வாக்கியால் வெட்டி கொடுமுடி
வரைக்கும் வாக்கியால் வெட்டி வச்சு பவானி அணை முதல் கொடுமுடி ஸ்தளத்து ஆத்து
வரைக்கும் முக்காத வழி தூரத்துக்கு சற்ப்பம் போன போக்குலே வாக்கியால் வெட்டின யேளு
காத வழி நடை கோணக் கோணலாக வாக்கியால்வெட்டி வச்சான்.
அந்தச் சற்ப்பம் போக்குலே வாக்கியால் வெட்டி வச்சு பவானி ஆத்துலே –
சற்ப்பம் படுத்துயிறுந்த இடத்துல – அணையும் கட்டி விச்சு படியினாலே காளிங்க
கவுண்டன் யென்னும் பேற்வரப்பட்டு பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே
சபுத்தம் கோறியிருக்கப்பட்ட பெண்ணை குலத்துல தன்புள்ளைக்கு கலியாணமும் செய்துகொண்டு
அம்ச புராணமாயி தெய்வ கடாட்சத்துனால சற்ப்பத்து னாமதேயமான காளிங்கரென்கிற
நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்ற நாமதேயமும் இரண்டு நாமதேயமும்
சேர்ந்து காளிங்க கவுண்டர் யென்குர பேற் பிறசுத்திப் பவறாயி தான் கட்டிவச்ச
அணைக்கு காலிங்க கவுண்டன் அணையென்றும்
காலிங்கக் கவுண்டன் வாக்கியா லென்றும் தான் உண்டு பண்ணின நீற்ப்பாங்கு
நிலத்தில் வெளயப்பட்ட காலிங்க நெல்லுயென்று வெளயப் பண்ணி சம்மந்த பாத்தியங்களுஞ்
செய்துகொண்டு யிருந்தான்.
இப்படி வாக்கியால் வெட்டி அணை கட்டி பிள்ளைக்கு கலியாணம் பண்ணுகிற
வரைக்கும் சபுதம் கோரி தீட்சை வளைத்துக்கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத்தினாலே
மனோபீஷ்டம் நெறவேறி யிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை
பண்ணிக்கொண்டு யிருக்கிற சமயத்திலே ஒரு னாசுவண் திட்சை மயிரை வாங்கிப் போட்டு
நிலைக்கண்ணாடியை யெதிரே வச்சு வணக்கத்துடனே நிண்ணுக்கொண்டு யிருந்தான். நித்திரை
தெளிஞ்சி நெலை கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷகாறம் மாகி யிருந்தபடியினாலே சந்தோஷம்
வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டார். அந்த னாசுவன் யென்
பேர் வெளங்கியிறுக்கும்படியாக பண்ண வேணுமென்று மனுவு கேட்டுக்கொண்ட படியினாலே தாம்
கட்டுவிச்சு அணையோடும் தான் இறுக்கப்பட்ட காலிங்கன்பாளையத்துக்கு தென்பிறம்
நாசுவன் பேறாலே வூரு உண்டுபண்ணி னாசுவன்பாளையமென்றும் பேர் விளங்க பண்ணி அந்த
னாசுவனுக்கு அந்த பாளையம் சர்வ மானியமாகக் கொடுத்தார்.
இப்படிக்குக் காலிங்கறாயக் கவுண்டர் யென்கிற பேர் பிறசித்திப் பெற்றவராய்
வெள்ளோட்டுக் குடியிருப்புக் காரராயி பூந்துறை னாட்டு நாடாதிபத்தியம் தாம் உண்டு
பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு புள்ளை புள்ளை தலைமுறைக்கும்
காலிங்க கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய்யிறுந்தார்கள்.
பவானி கூடலுலே கலிங்கக் கவுண்டன்யென்கிறவன் அணை கட்டி வச்சு மேற்பிடுறத்தி
பண்ணினது. கலியுக சாகாபுதம் 2000 காலிங்க கவுண்டன் கட்டியிருக்கப்பட்ட அனைஇலே
மேற்படி கவுண்டனையும் சற்ப்பத்தேயும் சிலா பிறதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு
சிலாசாசனமும் யெளுதியிருக்குரது அந்த அணை போட்டு யிறுக்கப்பட்ட இடத்தில் குடிகள்
பறம்பரையாஇ வருஷயிறுதியும் உச்சவம் பண்ணிக்கொண்டு வருகுரது வருஷப் பிரதியும்
காலிங்கக் கவுண்டன் பிறதிமைக்கி பூசை நெய்வேத்தியம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம்
வந்து வெள்ளாண்மை வெளஞ்சுக்கொண்டு வருகிறது.
இப்படி ஈஸ்வரர் அனுக்கிறஹத்துநாலே மூர்த்திகரம் உண்டாகி யிருக்கிறது.
இஸ்வறா அனுக்கிறஹத்துனாலே காலிங்க கவுண்டன் யென்ங்குர அம்சைபுறுஷன் வம்ச
பரம்பரையிலே காலிங்க கவுண்டற் யென்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது.
2
இப்படி காலிங்க கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய்
பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துரை னாடாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே கொங்கு
இருவத்தினாலு நாட்டுக்கும் பட்டக்காற்களாகி யிறுக்கப்பட்டவற்கள் சரியிருப்பும்
சரிமறியாதிகளும் குடுக்கப்படாது யெந்று சொன்னதுனாலேயும் பூர்வத்தில் சேரமாம்
பெறுமாள் சா(த்)தந்த
கோத்திரகாற்களுக்கு கார் விடிக்கை நாடு பிறவும் பண்ணிக்கொடுத்து யிறுக்கிற படியினாலேயும்
நாட்டு, பட்டக்காரர்கள் சரிமரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக் கொண்ட படியினாலே
வெள்ளோடு விட்டு மணவெருப்புனாலே ஆணைமலை சரிவிலே தங்கள் காணியாட்சியான
காவிடிக்கநாடு காடு கொண்டு வனமாயிருந்ததில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து
மாடுகளை சம்ரட்சணை பண்ணுகுரதுக்காக தங்கள் சனங்கள் இருந்த படியினாலே காவிடிக்க
நாட்டு வனத்துக்கு வந்து மாடுகளையும் பாத்து மா(ட்)டுகளுக்கு சமரட்சணைக்காக பட்டிகளும் போடுவிச்சு அஞ்சாறு காளைகளும்
கட்டிவிச்சு கொங்குயிருவத்திநாலு நாட்டுக்கும் பாளையப்பட்டுகளுக்கும்
இவற்களுக்கெல்லாம் அதிகமறியாதெகள் உண்டுபண்ணிக் கொள்ள வேணுமென்று நினைச்சு
றாயசமுஸ்தானத்துக்கப் போனார்.
றாய சமுஸ்தானத்தில் காத்துக்கொண்டுயிருக்கும் நாளையில் பனிரென்டு வருஷம்
வரைக்கும் றாயரவர்கள் பேட்டியில்லாமல் கய்யிலே கொண்டு போன திரவியங்களெல்லாம்
செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக்கொண்டு அதிவெஸனத்தை அடஞ்சவனாய் தன்னுடைய இஷ்ட
தெய்வத்தைப் பிராத்தனைச் செய்துகொண்டு மனவயிரத்தை அடஞ்சவனாய் பெனுக்கொண்டை
பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் செத்திரமாகப்
படுத்துக்கொண்டு இருந்தார்.
சுத்தவுபவாசத்துடனே காளி கோவிலிலே யிருக்கப்பட்ட காலிங்க கவுண்டன்
சொப்பனத்துலே பனிரெண்டானாள் றாத்திரி றாயர் குமாரனுக்கு சித்த பிறம்மை பிடுச்சு
அது னிவாரணம் யில்லாமல் யிருக்கிறபடியினாலே நீ என்னுடைய சன்னியதானத்தில்
இருக்கப்பட்ட விபூதியைக் கையிலே கொண்டு போய் அந்த சித்த பிறமையாயிருக்கப்பட்டவன்
பேரில் போட்டால் சித்த பிறமை தீந்து றாசகுமாரனாக அரமனை போய் சேர்ந்து யிருப்பான்
றாயர் அவர்கள் உன் பேரிலே சந்தோஷமாய் உன் மனோ பீஷ்டம் சித்தியாகும் என்று
சொப்பனமாச்சுது.
அந்த சொப்பனத்தைக் கண்டவுடனே பனிரென்று நாள் பட்டினி யிருக்கப்பட்டவன்
விபூதி யெடுத்துக்கொண்டு பெனு கொண்ட பட்டணத்துக்கு வந்து இது சொப்பனத்து சோதனை
பாத்துக்கொண்டு வறுகுர சமயத்தில் றாசகுமாரன் பட்டணத்து வீதிகளிலே சித்த பிறமை
பிடிச்சு தன்னபோலே திறியுர குறிப்பை கண்டுபிடிச்சு றாசகுமாரன் பேறிலே காளியெ
நினைச்சு விபூதி போட்டன் அந்த விபூதி தூளி றாசகுமாரன் பேறிலே விளுந்தவுடனே சித்த
பிறமை தெளிஞ்சவனாய் றாச சின்னம்ங்களுடனே அரமனைக்குப் போய்ச்சேர்ந்தார்.
அக்காலத்தில் நரபதி சிம்ஹ ஸனாதிபதியான பெனு கொண்டை விசயநகரம் ஆளப்பட்ட
தேவராயர் அவர்கள் தம்முடைய குமாரனானவனுக்கு சித்த பிறமை விடுதலை பண்ணினவனை
தரிவிக்கச் சொல்லி மந்திரி பிரதானிகளுக்கு உத்திரவு செய்த படியினாலே அந்தச்
சமயத்தில் தரிவிச்சு றாயர் அவர்கள் ரொம்பவும் சந்தோஷத்துனாலே காலிங்க கவுண்டனை
பாத்து உன் சென்மபூமி முதலான விர்த்தாந்தம் என்ன வென்று கேட்குமிடத்தில் பவாநி
கூடல் சமீபத்தில் உண்டு பண்ணின அணை வாக்கியால் வரலாறு முதலாகிய சங்கதிகளும் தெயிவ
கடாச்சயத்துனாலே காலிங்க கவுண்டன் என்ற பேர் வரப்பட்ட வரலாறும் கொங்கு இருவத்தினாலு
நாட்டுலே பட்ட குறுப்பு காரற்களை பாளையக்காற் சமானவசி மறியாதிகள் தாள்வு
நடக்கப்பட்டு சமுஸ்தானத்துலே காத்து கொண்டுயிருந்து காளிகாதேவி அனுக்கிரஹம் பண்ணின
நாள் வரைக்கும் வரலாறு அறியப் பண்ணிக் கொண்டபடியினாலே றாயர் அவர்கள் ரொம்பவும்
சந்தோஷப்பட்டு உன்னுடைய நாமதேயம் என்ன வென்று கேட்டார்கள் அப்பொ பேற் அறிய பண்ணிக்
கொண்டபடியினாலே றாயற் அவர்கள் உத்திரவு செய்து என்னுடைய வம்சம் உத்தாரம்
பண்ணியிறுக்குறபடியினாலே யென்னுடைய பேற் தெயிவ கடாட்சயத்துனாலே உண்டாகிய பேருடனே
றாச கடாட்சயத்துனாலே குடுக்கப்பட்ட றாச சபுதத்துடனே காலிங்கறாய கவுண்டன் யென்று
பேர் வச்சு உனக்கு யென்ன வேணுமென்று கேட்டார்கள். அந்தசமயத்தில் யென்
காணியாட்சியான ஆனைமலை சாற்வுலே கானிக்கை நாடு யென்னப்பட்ட பூமியை தயவு செய்ய
வேணுமென்று கேட்டுக்கொண்டார்.
றாயரவர்கள் கடாட்சம் செய்து யாளி, சிமஹல்லா பல்லாக்கு, உபய சாமரம்,
சுறுட்டி, சூறியபான ஆல வட்டம், வெள்ளைக் கொடை பச்சைக்கொடை, பஞ்சவர்ண கொடை,
பஞ்சவர்ண வெட்டுப் பாவாடை, அனும டால், கெறுட டால், மகர டால் பசவங்கர டால் பஞ்சு
வற்ன டால், ஆனை மேல் பேறிகை, ஒட்டகை மேல் நகாறு, குதிரை மேல் டங்கா, யெருது மேல்
தம்பட்டம், தாரை, சின்னம், யெக்காளம், பூரிகை, சிக்குமேளம் இது முதலான
வாத்தியங்கள் பிறுதுகளும் கொடுத்து ரண பாஷிகாம் கலிகிதுறாயி, முத்தொண்டி,
பஞ்சொண்டி, ஒண்டிரெக்கு வீர சங்கிலி, னாக்ககாணும் புவி சேறமம், கரடிமயிற்
வக்கியபிரீ, தங்கனிகளம், வீரகண்டாமணி, சாமதுரோஹாவெ(ண்)டையும் தங்க மிஞ்சு யிது முதலான ஆபரணங்கள் எல்லாம் அலங்கறிச்சு
குதிரைக்கு புலி தோல் மொமட்டு, அண்ட கல்வி, முகசல்லி, பக்கசல்லி, கால்தண்டை
கலிகிதுறாயி இது முதலான ஆபரணங்கள் தறிச்சு பட்டத்து குதிரையென்று நெமுகம் செய்து
பட்டண பிறவேசம் பண்ணிவிச்சு ஆனைமலை சறிவிலே காவிடிக்கை நாட்டு பூமிக்கு நீயே
மானசதாரனாக ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வர வேணுமென்று பட்டாபிஷேகம் செய்து பட்டத்து
ஆயுதம் கையிலே கொடுத்து அறுபத்து நாலு அமர காரரை மேமுகம் செய்து இரட்ட வாள், பச்ச
ஈட்டி, கறீட்டி, வெள்லி ஈட்டி, தங்க கட்டு துப்பாக்கி வெள்ளி முலாம் துபாகி சீனா மானுடை
இது முதலான ஆயுதங்களும் கொடுத்தார்கள்.
முன்னாலே நாகூர் பாளைப்பட்டு பட்ட குறுப்புக்காற்கள் சரிசமான மறியாதெ
குடுக்கரது யில்லை யென்று சொன்ன மனவெறுப்பு னாலே றாயசமுஸ்தானத்திலே காத்துயிருந்து
தெய்வ கடாட்சத்துனாலே சகல பிறுதுகள் ஆயுதங்களும் உண்டாய் காவிடிக்கை நாட்டுக்குப்
பாளையக்காரனாக காலிங்க ராய கவுண்டர் என்கிற பேர் பிரசித்திப்பட்டராய்ப்பட்டு
கட்டியங்களுடனே புறப்பட்டு ஆனைமலை சறவுலே வனாந்திரத்திலே தம்முடைய மாட்டுப்
பட்டிகள் இருக்கப்பட்ட யிடத்தில் சேர்ந்து அரமனையுங் கட்டி வீடுகள் உண்டுபண்ணி
பூர்வத்தில் வனத்திலே மாடுகளுக்கு ஆதாரமாக தோண்டி யிருக்கப்பட்ட ஊற்றுக் குளிகள்
இருக்கப்பட்ட யிடத்தில் ஊர் கட்டி விச்சபடியினாலே ஊத்துக்குளியென்று கிராம
நாமதேயம் உண்டாய் ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவனாய்
இருந்தார்கள்.
இராயர் சமுஸ்தானத்திலே காலிங்கராயக் கவுண்டர் என்கிற பேர் தெய்வ
கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும் பாளையக்காரர் என்று பேர்
பிரசித்திப்பட்டு பாளையப்பட்டு உண்டான னாள் முதல் சாலிவாகன சகாபுதம் 1120 முதல்
சகாபுதம் 1712 வரைக்கும் ஆண்டு 582க்கு பட்டங்களுடைய வரிசைகளையும் அவாளவாளுடைய
சறியேகளும் இதன் கீளே எழுதி வருகிறது.
வம்ச பரம்பரையாய் தெய்வ கடாட்சத்துனாலேயும் ராஜ கடாட்சத்துனாலேயும்
காலிங்கராய னென்கிற பேர் வமுச பரம்பரையாய் பட்டகார்களுக்குப் பேர் உண்டாகி
வருகிறது.
தெய்வ கடாட்சத்துனாலே சர்ப்பம் போன போக்கு வாய்க்காலும் வெட்டிவிச்சு
அணையும் கட்டிவிச்சு காலிங்கராய னென்கிர பேர் பிரசித்திப்பட்டு வமுசா
பிவிற்த்தியிலே காலிங்கறாய் னென்கிறவர் காவிடிக்க மனசுபுதாராறாயி காலிங்கறாயர்
னென்கிற பேரிலை ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பட்டாபிஷேகம் அனைவருடைய னாள்
வரைக்கும் வெகுகாலமான படியினாலே வமுசங்கள் ஒளுகாயிதெறி(ய)
வில்லை
அணைக்கும் வாக்கியாலுக்கும் காலிங்கராயன் அணையென்றும் காலிங்கராயன் வாக்கியால்
என்றும் பேர் பிரசித்தி படலாச்சுது.
*
காலிங்கராயன் வாய்க்கால் வெட்டிய ஆண்டு கலியுக சகாப்தம் 2000 என்று
வம்சாவளி கூறுவதைப் போலக் கொண்டால் கி.மு. 1101 என்றாகிறது. ஆனால், கி.பி. 13 ஆம்
நூற்றாண்டு கல்வெட்டுகளில்தான் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. கி.பி. 1800-ல்
வாய்க்காலைப் பார்வையிட்ட புகானன், 400 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்டதாகப்
பதிந்துள்ளார்.
கல்வெட்டுத் தகவல்கள், கிடைக்கும் வரையிலான சான்றுகளின்படி, கி.பி.
1265-ல் வீரபாண்டிய மன்னனின் அலுவலராகப் பணியாற்றத் தொடங்கிய காலிங்கராயன், கி.பி.
1270 ஆண்டு தொடங்கி, 12 ஆண்டு காலத்தில் வாய்க்காலை வெட்டி முடித்துள்ளார்.
சாலிவாகன சகாப்தம் 1203 கலியுக சகாப்தம் 4382 விய வருஷம் தை மாதம் 5 ஆம் தேதி,
அதாவது கி.பி. 1282 ஆம் ஆண்டில், வாய்க்கால் பணி நிறைவு பெற்றதாக ஜமீன்
ஊத்துக்குளி அகத்தூரம்மன் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
காலிங்கராயன் வாய்க்கால் மூலம், நதிகள் இணைப்பின் முன்னோடியாக, பவானி
ஆறும் நொய்யலும் இணைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.
காலிங்கராயன் வாய்க்காலிலிருந்து மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால், பெரிய
வட்டம் வாய்க்கால், ஆவுடையார்பாறை வாய்க்கால் என மூன்று கிளைகள் பிரிகின்றன.
உறுதிபடத் தெரிய வராத ஏதோ ஒரு காரணத்தால் வாய்க்காலை வெட்டிய
காலிங்கராயனோ அவர் குடும்பமோ அல்லது அவருடைய சாத்தந்தை கோத்திரத்தைச் சேர்ந்த
பங்காளிகளோ காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தால் பயன் பெறவில்லை என்றொரு தகவல்
இருக்கிறது. பூந்துறை நாட்டிலிருந்த காலிங்கராயன், வாய்க்காலை மக்கள் பொறுப்பில்
விட்டுவிட்டு, உறவினர்களை இந்தப் பாசனப் பகுதிகளிலிருந்து வெளியேறப்
பணித்துவிட்டு, குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகேயுள்ள ஊற்றுக்குழிக்குச்
சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வமிசாவளியிலும் ஏதோ மரியாதைக் குறைவு காரணமாக
நாட்டைவிட்டுக் காலிங்கராயன் வெளியேறிய தகவல் இடம் பெற்றிருக்கிறது.
காலிங்கராயன் என்பது ஒரு பட்டப் பெயரே. பாண்டியர் ஆட்சிக் காலத்தில்
கொங்கு நாட்டில் பகுதி அலுவலராக இருந்தவர் இந்தக் காலிங்கராயன். யாராக இருந்தாலும்
இன்றும் என்றும் ஈரோடு மாவட்டத்தின் செழிப்பில் இடம் பெற்றிருக்கும் பெயர்
காலிங்கராயன், அவர் வெட்டிய வாய்க்காலில் வழிந்தோடும் நீரால்!
கொடிவேரி அணை
கொடிவேரி அணை. சோழ கொங்காள்வான் ஆள் (கி.பி 1125) ஆம் ஆண்டு கட்டப்பட்டது.../ கொடிவேரியின் பழைய பெயர் குழவாற்றூர்.
முதல் குலோத்துங்கனின் 55-வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) சோழ கொங்காள்வான் கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களை கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினான்..இன்று இது கொடிவேரி அணை என்று அழைக்கப்படுகிறது..இந்த செய்தி கொடிவேரி,பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.../
கொடிவேரி அணை சத்தியமங்கலத்திலிருந்து 15,கி.மீ தொலைவில் உள்ளது.கொடிவேரி அணையின் வடக்குப் பக்கம் ஒரு கால்வாயும்,தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் ஊராளி செம்ப வேட்டுவர் வெட்டினார்.கொடிவேரி அணையின் வடக்குப் பகுதில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கிறது.ஏறக்குறைய 10 கி.மீ வரை செல்கிறது.இந்தக் கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று அழைக்கப்படுகிறது..கொடிவேரி அணையின் தெற்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கால்வாய் கவுந்தப்பாடி,மேட்டுப்பாளையம் வரை செல்கிறது.இது ஏறக்குறை 15 கி.மீ தொலைவு செல்கிறது.இந்தக் கால்வாய் தடப்பள்ளி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது,,இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் பல ஆயரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது..இதிலிருந்து கி.பி.11 ஆம் நூற்றண்டிலே கொங்குநாட்டில் நீர்பாசன வசதியை பெருக்கியவர்கள் வேட்டுவ ஆட்சியாளர்களே என உறுதியாக தெரிகிறது.../
கொடிவேரி என்பதன் உண்மைப் பெயர் "கொடிவேலி".
நமது இந்தப் பகுதி.... அந்தியூர், கோபி, சத்தி, புளியம்பட்டி, அன்னூர், பவானிசாகர் ( பவானி ஆற்றின் உண்மைப் பெயர் "வாணி" ஆறு ) ஆகிய இப் பகுதிகள் விஜயநகர பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்த மைசூர் சமஸ்தானத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட பகுதி இவை அனைத்தும்.
இந்த நம் பகுதியை கவனித்து வந்த குறுநில மன்னனின் பெயர் நஞ்சராயர். காளிங்கராயரின் வழி வந்தவர். இந்த பகுதியில் முற்காலத்தில் அதிகம் வாழ்ந்தவர்கள் லிங்காயத்து சமூகத்தார்.
1490ல் கட்டப்பட்டது தான் இந்த கொடிவேலி அணை. லிங்கயத்தார் தான் மைசூர் மன்னன் கிருஷ்ண ராஜவுடையாரிடம், இந்த பகுதி ஆற்றை ஒட்டியுள்ள செழிப்பான அடர்ந்த காட்டுப் பகுதி இங்கு விவசாயம் செய்து இப் பகுதியை செழிப்பாக்கலாம் என லிங்காயத்து சமூகத்தார் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க இங்கு மைசூர் மன்னன் கிருஷ்ண ராஜவுடையாரால் கொடிவேலி அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
(1286ல் கட்டப்பட்டது வாணி ஆற்றில் காளிங்கராயரின் அணை.)
மூன்று முறை முழுமையாக கட்டப்பட்டும் பெரு மழை வெள்ளத்தால் மூன்று முறையும் இடிந்து மாபெரும் சேதமானது கொடிவேலி அணை. திறப்புவிழாவிற்கு மைசூர் மன்னர் வருகை புரிவது ஏதோ அபசகுனமென அறிந்த மன்னன், மீண்டும் நாலாவது முறையாக அணையை கட்டி மன்னன் வராமலே திறக்கப்பட்டது இந்த கொடிவேலி அணை.
கொடிவேலி அணைப் பகுதியில் தற்பொது ஒரு கருப்பராயன் கோவில் உள்ளது. உண்மையில் அது சிவன் கோவில். 500 ஆண்டுகள் பழமையானது. லிங்காயத்து சமூகத்தார் அமைத்த சிவன் கோவில். தற்போது அது கருப்பராயன் கோவிலாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கும் அதிகமாக பழமையானது பண்ணாரி அம்மன் திருக்கோவில்.
கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.
ஆற்றிற்கு இணையாக வெட்டப்பட்ட கால்வாய்கள்
அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன.உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி (Helsinki Rules),
- ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது.
- குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும்.
- ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது.
தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று; அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும்.
அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.
மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங்கராயன் அணைக்கட்டு.
தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்று சேர்கிறது.
மணல்போக்கி தொழில்நுட்பம்
அணைக்கட்டின் மையப் பகுதியில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.சுரங்கத்துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற்றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக்குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள். இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது.
Wednesday, October 24, 2018
டணாயக்கன்கோட்டை ,பவானிசாகர் அணை.
டணாயக்கன் கோட்டை
Danayakkan Kottai
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை. தமிழகத்தில் அனைவர்க்கும் தெரிந்த
அணைகளுள் ஒன்று. இந்நாள் திருப்பூர் மாவட்டத்தில் (முந்நாள் கோவை மாவட்டம்)
அமைந்துள்ள அணை. நம் நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
நீர்ப்பாசனத்திட்டங்களில் முதன்மையான ஒன்று. முழுதும் மண்ணால் கட்டப்பட்ட அணை
என்னும் பெருமையும் கொண்டது. அணையின் நீளமும் பெரிது; நீர்த்தேக்கப் பரப்பும்
பெரிது. அணை கட்டுவதற்காக மக்கள் வெளியேற்றப்பட்டு வேறிடங்களில்
குடியேற்றப்பட்டார்கள். அவ்வாறு தம் வாழ்விடத்தை நல்கிய மக்கள் வாழ்ந்த ஊர்களாவன:
கூடுவாய், குய்யனூர், வடவள்ளி, பீர்க்கடவு, ராஜன் நகர், சிக்கரசம்பாளையம்,
கொற்றமங்கலம், பற்றமங்கலம், பசுவபாளையம். அணை 1955-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு,
1956-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அணைத்தேக்க நீரின்
மட்டம் 100-120 அடிகள். அணைகட்டிய காலத்திலிருந்து கடந்துவிட்ட இத்தனை
ஆண்டுகளில், பல போது நீர்மட்டம் குறைய நேரும்போதெல்லாம் நீரில் மூழ்கியிருக்கும்
டணாயக்கன் கோட்டை வெளியில் தெரியும் நிகழ்வுகள் ஏற்படும்.
டணாயக்கன்கோட்டை
பல
ஆண்டுகளுக்கொருமுறை, அணை நீர் வற்றிக் கோட்டை தெரியும் நிகழ்வு வரலாற்று
ஆர்வலர்களுக்கு அரியதொரு வாய்ப்பான விருந்து.
ஏழு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர், மூன்று
ஆண்டுகளுக்கு முன்பு 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், டணாயக்கன் கோட்டை
நீருக்கு வெளியில் புலப்பட்டது பற்றிய செய்தி ஒரு நாளிதழில் வந்திருந்தது. செய்தியில்,
பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் கோட்டை வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அச்செய்தியைப் பார்த்தது முதற்கொண்டே அதைக்காணவேண்டும் என்ற ஆவல் ஆழப்பதிந்து,
நேரில் கோட்டையைப்பார்க்கும் வழிமுறைகளைத் தேடுவதில் எண்ணம் வேகமெடுத்தது.
ஏற்கெனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திம்மநாயக்கன்பாளையத்தில்
இருக்கும் “பாடிகாவல்” குடியைச் சேர்ந்த பழநிச்சாமி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டிருந்தது. அவரைத்
தொடர்புகொண்டபோது, பவானிசாகரில் இருக்கும் அவருடைய உறவினர் ஒருவர் மூலம் பரிசல்
ஓட்டும் படகோட்டிகளின் துணையுடன்
கோட்டையைக் காண ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார். நாள்கள் சில கடந்தும் அவரால்
முயன்றுமுடிக்க இயலவில்லை. அப்போதுதான், என் உறவினர் ஒருவர் மூலம்,
சத்தியமங்கலத்துக்கு அருகில் தூக்கநாயக்கன்பாளையத்தில் இருக்கும் வரலாற்று
ஆய்வாளர் (அடிப்படையில் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலக்கிழார்) திரு. தூ.நா.இராமசாமி
அவர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் பல ஆண்டுகளுக்கு
முன் கோட்டையைக் கண்டிருப்பதாகவும், தற்போது முயலலாம் எனவும் சொல்லவே, நாள்
குறித்துப் பயணப்பட்டேன்.
பயணம்
தொடங்கியது
2013,
ஜூன் 8. சத்தியமங்கலம் வழியாகத் தூக்கநாயக்கன்பாளையம் அடைந்து தூ.நா.இராமசாமி அவர்களைச் சந்தித்தேன். நல்லாசிரியர்போல,
இவர் நல்லுழவர். வானொலிகளில் வேளாண்மை பற்றிப் பல ஆண்டுகள் உரையாற்றியுள்ளவர்.
அவர் பகுதியில் பல வரலாற்றுச் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர். ”ஆம்னி” வண்டியொன்றை ஏற்பாடு செய்துகொண்டு நாங்கள் பவானிசாகர் நோக்கிப்பயணப்பட்டோம். சத்தியமங்கலக் காட்டுப்பகுதியினூடே தார்ச்சலையில்
வண்டி சென்றது. ஆளரவமற்ற சாலை. யானைகள் நடமாடும் பகுதி. சித்தன்குட்டை, ஜே.ஜே.நகர்
ஆகிய சிற்றூர்களைக் கடந்து பவானி ஆற்றுப்படுகையை
அடைந்தோம்.
கோட்டைக்கோயில்
அக்கரையிலும்
மண்தரையில் சற்றுத்தொலைவு நடந்து சென்றபிறகே, கோட்டைக்கோயிலை நெருங்க முடிந்தது. கோட்டையை
நெருங்கினோம் என்று சொல்லாமல் கோட்டைக்கோயிலை நெருங்கினோம் என்று சொல்லக் காரணம்
உண்டு. உண்மையில் கோட்டை எப்போதோ இடிந்து கற்குவியல்களே ஆங்காங்கு சிதறிக்கிடந்த
நிலையில், கோயிலின் கட்டுமானப்பகுதி
மட்டுமே இந்நாள்வரை பார்வைக்குத் தெரிந்திருந்தது. கோயிலை நெருங்கும் வழியில்
கற்கள் சிதறிக்கிடந்தன. கோயிலின் முன்புறம், கற்களாலான சுற்றுச்சுவர் குட்டிச்
சுவராகத் தோற்றமளித்தது. கோயிலும் இடிபாடுகள் நிறைந்து சிதைந்த நிலையில், நம்
எண்ணத்தை அதன் பழந்தோற்றத்துக்கு இட்டுச்சென்றது. ஒரு நீள் சதுர அமைப்பிலிருந்த
அக்கோயிலுக்கு இரு வாயில்கள் இருந்தன. பெரிய வாயிலே கோயிலின் முன்புற வாயில்.
முன்புற வாயிலில் நாம் நின்றால் நேரே கருவறை தெரிந்தது. வழக்கமாய் அமைந்திருக்கும் கோபுர வாயில் போல அல்லாது, இன்றைய மாளிகைகளில் காணப்படும் வாயில்
முகப்பு. வண்டிகள் நிற்க அமைக்கப்படும்
முகப்புக் கூரையை ஒத்திருந்தது. முகப்புக்கூரையைத் தாங்கி நிற்கும் நான்கு
தூண்கள். தூண்கள், மூன்று சதுரப்பகுதிகளையும் அவற்றின் இடையில்
இரண்டு எண்பட்டைப்பகுதிகளையும் கொண்டதாக விளங்கின. அதன் மேற்பகுதியில் ஒரு போதிகை.
ஆங்கில “T” எழுத்தின் ஒரு வடிவத்தைக்கொண்டுள்ள, சோழர் பாணியில்
அமைந்த வெட்டுப்போதிகை. நான்கு தூண்களும் “symmetry” என்று சொல்லக்கூடிய சமச்சீர் உருவத்தில் இல்லை. மூன்று தூண்கள்
ஒரே அமைப்பிலும், ஒரு தூண் மட்டும் வேறுபட்ட அமைப்பிலும் இருந்தன. இந்தத்தூணில்
சதுரப் பகுதிகள் இரண்டில், கீழ்ச்சதுரத்தில் கொடி வேலைப்பாடும், இடைச்சதுரத்தில்
பதும இதழ் வேலைப்பாடும் காணப்பட்டன. மற்ற தூண்களில் இத்தகைய வேலைப்பாடுகள் இல்லை. போதிகையின்
முன்புறத்தில் நேர் கோடுகளாலான ஒரு அணி (அலங்கார) வேலைப்பாடு. தூண்களின் மேற்பகுதியில்,
கூரையின் கவிழ்ந்த கபோதப் பகுதி இடிந்து போய்விட்ட நிலையில், முதல் இரண்டு தூண்கள்
வரை இரண்டு கூடுகளும், நான்காவது தூணுக்குமேல் ஒரு கூடும் எஞ்சியிருந்தன.
கோட்டைக்கோயில் |
முன்புற வாயில் |
மேற்படி முகப்பை அடுத்து உள்ளே முன்
மண்டபம். மண்டப வாயிலின் நிலைக்கால்களில் அழகு தரும் அணி வேலைப்பாடு. நிலையை
ஒட்டி இருபுறமும் இரு அரைத்தூண்களும், அவற்றை அடுத்து இரு தூண்களும் கொண்ட சுவர்
அமைப்பு. மண்டபத்தின் அடித்தளத்தில்
(அதிட்டானப்பகுதியில்) பூவிதழ் வேலைப்படுள்ள சிறிய அளவிலான ஒரு குமுதப்படையும்,
அதன் கீழ் கண்டமும் ஜகதிப்படையும் இருந்தன. மண்டபத்தின் இரு கோடிகளும் இடிந்து பெரிய
குகை வாயிலைப்போல் திறந்து கிடந்தன.
அந்த இடிபாடுகள், சுவரின் கட்டுமான அமைப்பை நமக்கு
எடுத்துக்காட்டுவனவாய் இருந்தன. சுவர், இருகற்களைக் கொண்டது. ஒன்று வெளிப்புறம்
தெரியும் கல். மற்றது மண்டபத்தின் உட்புறச் சுவரில் காணப்படுவது. இவ்விரு கற்களின் இடையே துண்டுக்கற்களும்
செங்கற்களும் திணிக்கப்பட்டு சுவருக்கு வலு சேர்த்திருந்தன. மண்டபத்தின்
கடைக்கோடியில் மட்டும் சுவரின் மேற்பகுதியில் கூடுகளும், கூடுகளுக்கு
மேற்புறத்தில் அமைந்திருக்கும் யாளி வரிசையும் புலப்பட்டன.
முன்புற வாயிலைப் பார்த்து முடித்திருக்கிறோம். இதே
போல, பக்கவாட்டு வாயிலும் இருந்தது. இது, முன்புற வாயிலைக்காட்டிலும் சிறியது. இரு
தூண்கள் மட்டுமே உள்ளன. தூண்களின் அடிப்புறம் ஒரு நீள் சதுரம்; அதையடுத்து,
உருண்டைத்தூண். மேற்பகுதியில் கபோதகமும் அதன்மேல் யாளி வரிசையும் காணப்பட்டன. வாயிற்பகுதியிலிருந்து முன்மண்டபத்தினுள் நுழைகிறோம்.
இங்கும் எதிரே அர்த்தமண்டபத்தை நோக்கி நிற்கும் தூண்கள். இவையும் எளிமையாகத் தோற்றமளிக்கும்
உருண்டைத்தூண்களே. அர்த்தமண்டபத்தைச் சுற்றிக் கோயிலின் திருச்சுற்று (பிராகாரம்).
திருச்சுற்றுக்குள் நுழைந்து சுற்றிவரத் துணிவில்லை. திருச்சுற்றின் சுவரும்
ஆங்காங்கே இடிந்து திருச்சுற்று முழுதும் இருள் சூழ்ந்திருந்தது.
திருச்சுற்றிலிருந்து புறப்பட்டு முன்புற வாயில்வரை உள்ள வெளியிடத்தைத் தூண்கள் தாங்கியிருந்தன. அர்த்தமண்டப நுழைவு வாயிலின்
நிலைக்கால்களிலும் முன்பு பார்த்தவாறே சிறிய அளவில் அணி வேலைப்பாடு காணப்பட்டது.
திருச்சுற்றுப்பகுதியில் இடிபாடுகளின் இடைவெளியில் இருளைக் கிழித்தவண்ணம் ஒளி உள்
நுழைந்தது.
சுற்றுச்சுவர், கூடுகள், யாளி வரிசை |
முன் மண்டபம் |
கோயிலின் சுற்றுச் சுவரின் வேறொரு பகுதியில், சுவர் முழுதும் சிதைந்து விழுந்து கிடந்தது. கோயிலின் இந்தப்பகுதியில் மட்டுமே சுற்றுச் சுவரில் அரைத் தூண்களுடன் கூடிய தேவகோட்டம் (கோஷ்டம்) என்னும் அமைப்பு இருந்தது. தேவகோட்டம் இருவகைப்படும். ஒன்று சாலை அமைப்பு; மற்றது தோரண அமைப்பு. இங்கு காணப்பட்டது தோரண அமைப்பு. அந்த இடிபாடுகளுக்கிடையில், கற்களின்மேலும் தேவகோட்டத்தின் மேலும் ஏறிக் கூரையை அடைந்து பார்த்தோம். கூரைத் தளம் செங்கற்களைக்கொண்டு உறுதியாக அமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நாளில் ”சுருக்கி” என்று சொல்கிறோமே அது போல. கூரை, முதலில் நீண்ட பலகைக் கற்கள் கொண்டு மூடப்பட்டு அவற்றின்மேல் செங்கற்கள் பாவப்பட்டிருந்த அமைப்பு புலப்பட்டது.. ஏனெனில், பலகைக் கற்களால் மூடப்பட்ட பரப்புகளும், செங்கற்கள் நன்கு பாவிய பரப்புகளும் சில இடங்களில் தெரிந்தன. செங்கற்களும் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்தன. கூரைத்தளம் கோயில் கற்கட்டுமானத்தின் இறுதி உறுப்பைத் தெளிவாக்கியது. கூரையில் காணப்படும் யாளி வரிசைதான் இறுதி. இந்த யாளி வரிசை முடியும் முனைப்பகுதியில் இருமுனைகளில் யாளி உருவத்தினின்று முற்றிலும் மாறுபட்ட ஓர் உருவச்சிற்பம் கண்ணைக்கவர்ந்தது. எந்த விலங்கு என்று இனம் காண இயலாதவாறு ஒரு முகம். கோயில்களில் காணப்படும் பலி பீடக்கல்லை நினைவூட்டும் வண்ணம் தலைப்பகுதி. விலங்கின் வாய்ப்பகுதி பக்கவாட்டில் பார்க்கும்போது, அகலத்திறந்த ஒரு மீனின் வாயைப்போலக் காட்சியளித்தது. கூரையில் நின்று பார்க்கையில் தொலைவில் ஆற்றின் சிறிய நீரோட்டமும், சிதறிக்கிடக்கும் கோட்டைக்கற்களும், மலையடுக்கும் அழ்கான காட்சியாகத் தெரிந்தன.
பயணம் முடிவுறுதல்
டணாயக்கன்
கோட்டைபயணத்தை முடித்துத் திரும்பும் வேளை. நாங்கள் சென்றிருந்த போது, வேறு சில
இளைஞர்களும் வந்திருந்தனர். எங்களுக்கு முன்னரே அவர்கள் வந்திருந்ததால், நாங்கள்
கோயிலைச் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சுற்றிலும் வேறு
இடங்களிலும் உலவிவிட்டு வந்திருந்தனர். நேரமோ மாலை ஐந்து மணி ஆகியிருந்தது.
இடையில் நேரம் போனது தெரியவில்லை; நேரத்தைப் பார்க்கவேயில்லை என்றும் சொல்லலாம்.
சிறிதளவே ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் இப்போது மெல்ல நீர் மட்டம் உயர்வது தெரிந்தது.
நீரில் இறங்கி ஆற்றைக்கடக்கத் தொடங்கினோம். எனக்குச் சற்றே துன்பமாகவே இருந்தது.
மண்ணுக்குள் கால்கள் புதைவதோடு நீரின் ஓட்டமும் என்னை இழுத்துச் சாய்த்தது.
ஒருவாறு முயன்று ஆற்றைக் கடந்து நீரின் இக்கரையில் நின்றோம். இதுவரை நடந்து
சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட சோர்வும் களைப்பும் முன் நின்றன. சற்றுநேரம் ஓய்வாக
இருந்துவிட்டுச் செல்லலாம் என்று நானும் நண்பரும் எண்ணியிருந்தபோது, அந்த
இளைஞர்கள், இன்னும் சற்று நேரம் இருந்தால் மாலை மங்கும் வேளையில் அக்கரையில்
தொலைவில் வனத்து ஓரத்தில் யானைகள் வந்து திரிவதைக்காணலாம் என்று ஆர்வமூட்டினர்.
அதுபோலவே, சற்று நேரம் காத்திருந்தோம். வெகுதொலைவில் யானைக்குழு ஒன்றின்
சிற்றுருவம் புலப்பட்டது. ஒளிப்படக்கருவியில் உருப்பெருக்கம் செய்து ஒளிப்படம்
எடுத்துக்கொண்டேன். இளைஞர்களுடனும்
சேர்ந்து ஒளிப்படம் எடுத்தபின்னர் ஆற்றுப்படுகையில் மீண்டும் நடைப்பயணம். அரை மணி
நேரத்துக்கும் மேல் நடந்து வண்டியை அடைந்ததும் வண்டிப்பயணம் தொடர்ந்தது. சத்தியமங்கலம்
சேர்ந்ததும் சிற்றுண்டி முடித்து, நண்பரிடம் விடைபெற்றுக் கோவை அடைந்ததோடு டணாயக்கன்கோட்டைப்
பயணம் நிறைவுற்றது.
டணாயக்கன்கோட்டையை நோக்கி இரண்டாவது பயணம்.
மீண்டும்
கட்டுரையின் முதல் வரியைப்படிக்க வேண்டுகிறேன். 25-10-2016 அன்று, மூன்று ஆண்டுகளுக்குப்பின்னர்
மீண்டும் அணை வெளியில் தெரிந்த செய்தியைக்கண்டதும், இம்முறையும் சென்று
பார்க்கவேண்டும் என்னும் ஆவல் எழுந்தது. சென்றமுறை நான் மட்டுமே நண்பருடன் இணைந்துகொண்டேன்.
இம்முறை, வரலாறில் ஆர்வமுள்ள நண்பர்களோடு சென்று பார்க்கவேண்டும்
என்னும் விருப்பம் ஏற்பட்டது. நண்பர்களுடன் செய்தியைப்பகிர்ந்துகொண்டு, பயணத்தைத்
திட்டமிட்டேன். நல்லுழவர் இராமசாமி அவர்கள்தாம் எங்கள் பயணத்தலைவர்.
கோவையிலிருந்து என்னுடன் இணைந்த நண்பர்களுள் ஒருவர் மீனாட்சிசுந்தரம். ஆங்கில
நாளிதழொன்றில் படைப்புக்கட்டுரை எழுதும் எழுத்தாளர். கல்லூரியில்
ஆங்கிலப்பேராசிரியராகப் பணியில் இருந்து தாம் விரும்பும் எழுத்துலகுக்கு வந்தவர். ஒருவர்
கிருஷ்ணகுமார். பள்ளி ஆசிரியர். பெருங்கற்காலச் சின்னங்களைத் தேடிப்பிடித்துச்
சேகரம் செய்து பள்ளியில் அவற்றைக் காட்சியாக வைத்து மாணவர்களுக்கு வரலாற்று
விழிப்புணர்ச்சி ஊட்டுபவர். ஒருவர் இரவிச்சந்திரன். நாணயவியலாளர். வரலாற்று
ஆர்வலர். வரலாற்று ஆவணங்களைச் சேர்த்து வைத்து, நாணயவியல் கண்காட்சிகளில்
காட்சிப்படுத்துபவர். ஒருவர் தங்கமோகன். தனித்தொழில் கொண்டவர். வரலாற்றுப்
பயணங்களில் ஆர்வம் காட்டிக் கலந்துகொள்பவர். வண்டியொன்றை ஏற்பாடு செய்துகொண்டு காலை
எட்டுமணியளவில் புறப்பட்டுச் சிறுமுகை என்னும் ஊரை அடைந்தோம். அங்கு நல்லுழவரும்
அவருடைய நண்பரான நாளிதழ் இதழியலாளர் தர்மராஜும்
எங்களுடன் இணைந்தனர். சிற்றுண்டி முடித்து பவானிசாகர் சாலையில் பயணப்பட்டு
(அணைக்குச் செல்லாமல் வேறு பாதையில் பிரிந்து), பெத்திக்குட்டை, அய்யம்பாளையம்,
சித்தன் குட்டை வழியாகக் கன்ராயன் மொக்கை என்னும் சிறு குடியிருப்புப் பகுதியை
அடைந்தோம்.
பரிசல் பயணம்
கன்ராயன் மொக்கையில், பரிசல் மூலம் ஆற்றைக்கடப்பது
என்று முடிவாயிற்று. காரணம், சென்ற பயணத்தைப்போல் இல்லாமல் இம்முறை ஆற்றின் நீர்ப்பரப்பு
மிகுதியாயிருந்தது. இரண்டு பரிசல்கள் தேவையாயிருந்தது. ஆனால், சில பரிசல்கள் ஏற்கெனவே ஆற்றுக்குள்
சென்றுவிட்டபடியால் இரண்டு பரிசல்கள் கிடைக்காத சூழ்நிலை. இராமன் என்னும் இளைஞரின்
ஒரு பரிசலே இருந்தது. நாங்கள் எட்டுப்பேர். பரிசலோட்டி இராமனுடன் சேர்த்து ஒன்பது
பேர். ஒன்பது பேர் ஒரே பரிசலில் என்பது சற்றே இன்னல் தரக்கூடியதுதான். ஆனால், இராமன்
ஆற்றல் மிக்க இளைஞர். ஒற்றையாகவே துடுப்பு வலிக்க முனைந்தார். ஆற்றங்கரையில் பரிசல்
இருந்தது. கரை வரை நடைப்பயணம்;
இராமன் வலிமையாகத் துடுப்பை இயக்கினார். பரிசலை அவர் இயக்கிய பாங்கு அருமை. பரிசல் நேர் கோட்டில் இலக்கை நோக்கி நகராமல், சில நிமிடங்கள் ஒரு பக்கமாகவும், சில நிமிடங்கள் அதற்கு எதிர்ப்பக்கமாகவும் வளைந்து வளைந்து சென்றது. காற்று, நீரின் அலை ஆகிய இரு காரணிகளின் அடிப்படையிலேயே பரிசலைச் செலுத்தவேண்டும். எனவேதான், துடுப்பின் பயன்பாடு இருபக்க வளைவுக்கேற்றவாறு அமையவேண்டும். காற்று மென்மையாக வீசியது; அலை மெல்ல வேகம் பெற்றது. பரிசலின் வேகம் குறைந்தது. கோட்டைக்கோயில் பார்வைக்கு வெகு தொலைவில் தெரிந்தது.
இராமன் வலிமையாகத் துடுப்பை இயக்கினார். பரிசலை அவர் இயக்கிய பாங்கு அருமை. பரிசல் நேர் கோட்டில் இலக்கை நோக்கி நகராமல், சில நிமிடங்கள் ஒரு பக்கமாகவும், சில நிமிடங்கள் அதற்கு எதிர்ப்பக்கமாகவும் வளைந்து வளைந்து சென்றது. காற்று, நீரின் அலை ஆகிய இரு காரணிகளின் அடிப்படையிலேயே பரிசலைச் செலுத்தவேண்டும். எனவேதான், துடுப்பின் பயன்பாடு இருபக்க வளைவுக்கேற்றவாறு அமையவேண்டும். காற்று மென்மையாக வீசியது; அலை மெல்ல வேகம் பெற்றது. பரிசலின் வேகம் குறைந்தது. கோட்டைக்கோயில் பார்வைக்கு வெகு தொலைவில் தெரிந்தது.
இராமன், அருகில் தெரிந்த கரையொன்றில் நான்கு பேரைத் தரையிறக்கிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். இப்போது பரிசலை இயக்குவது எளிதாயிருந்தது. எங்களைக் கோயில் இருக்கும் அக்கரையில் இறக்கிவிட்டு, மற்றவர்களையும் விட்ட இடத்திலிருந்து அழைத்துவந்தார். அண்மைக்காலத்தில், பரிசல் பயணம் எல்லாருக்குமே கிடைத்திராத ஒன்று. எனவே, பரிசல் பயணம் எங்கள் அனைவருக்கும் மிக இனிதாயிருந்தது.
மீண்டும் கோட்டைக்கோயில் (மாதவப்பெருமாள் கோயில்)
கரையில்
சற்றுத் தொலைவு நடந்ததுமே கோயில் நெருங்கியது. பல ஆண்டுகளாக நீரில் இதுபோல் ஒரு
கோயில் இருந்துள்ளதா எனும் வியப்பை அனைவரும் பகிர்ந்துகொண்டோம். கோயிலில், முன்பு
பார்த்தபோதிருந்த நிலையைக்காட்டிலும் சிதைவு கூடுதலாகக் காணப்பட்டது. கோயில்
முழுக்கச் சுற்றிப்பார்த்தோம். கூரையின் மேலே ஏறினோம். ஒளிப்படங்கள்
எடுத்துக்கொண்டோம். அணை பற்றிய செய்திகள், கோட்டை பற்றிய செய்திகள், கோயில் பற்றிய
செய்திகள் எனப் பல்வேறு வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டோம். பக்கவாட்டு
வாயிலை ஒட்டி இருபுறமும் ஜகதிப்படையில் கானப்பட்ட கல்வெட்டு வரிகளைப் பார்த்தோம். சற்றே
மண்ணைக் கிளறி மேலும் கல்வெட்டு வரிகள் நன்கு தெரியும் வண்ணம் செய்து, கல்வெட்டு
வரிகளின் மேல், கொண்டுசென்ற சுண்ணப்பொடியை நீரில் கரைத்துப் பூசினோம். கல்வெட்டு
வரிகள் நன்கு புலப்பட்டன. கல்வெட்டு வரிகள் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
மொழியும் தமிழ் அல்ல; சமக்கிருதம். ஸ்வஸ்திஸ்ரீ ஹரி - ஜகத் - தேவ -
விச்வம் - ஸண்ட்யா
- விபுத -
மஹாராயஸ்ய ஆகிய சொற்களை
என்னால் இனம் காண முடிந்தது. இச்சொற்கள், கல்வெட்டுகளில் வரும் மெய்க்கீர்த்தியை
ஒத்த பகுதிகளில் எழுதப்படும் சமக்கிருதச் சொற்கள் எனக் கருதலாம். ஆனால், இச்
சொற்கள் நேரடியாக அரசனின் விருதுப்பெயர்களைக் குறிக்கவில்லை என்பது தெளிவு.
ஏனெனில், மாதப்ப தண்டநாயக்கனின்
விருதுப்பெயர்களான சிதகரகண்டன், இம்மடி இராகுத்தராயன் ஆகிய பெயர்கள் இல்லை.
ஆனால், வலப்புற ஜகதியில் கேத்தெய நாயக்கர் என்னும் பெயர் புலப்பட்டது.
இப்பெயர் இக்கோயிலோடு தொடர்புடையது. ஏனெனில், இக்கோயில் கேத்தய தண்டநாயக்கரால்
கட்டப்பட்டது.
திரும்புதல்
கோயிலின் முன்மண்டபம் |
குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்ட பின்னர்
திரும்பும்போது மற்றொரு பரிசலும் கிடைத்தது. ஏற்கெனவே அங்கு வந்திருந்த
பொங்கியண்ணன் என்பவரின் பரிசல். நான்கு நான்கு பேராக நாங்கள் இரு பரிசல்களில்
அமர்ந்து திரும்பிக் கன்ராயன் மொக்கை அடைந்தோம். பொங்கியண்ணன் கன்ராயன் மொக்கையின்
ஒரு ”வார்டு” உறுப்பினர். அவர், கோட்டையில்
நாங்கள் பார்த்த கோயிலைத் தவிர்த்து மற்றும் இரு கோயில்கள் நீரில் மூழ்கியிருப்பதாகச் சொன்னார். அவற்றுள் ஒன்றில்
தனிக்கல்லில் கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒருவேளை நீர் மட்டம் இன்னும்
குறையநேருமானால் அக்கோயில்கள் இரண்டுமோ அல்லது ஒன்றோ வெளியில் தெரிய வாய்ப்பு
உள்ளது என அவர் சொன்னது எங்கள் ஆவலைத் தூண்டியது. அவ்வாறு கோயில் தெரிந்தால்
எங்களுக்குத் தெரிவிக்குமாறு கூறினோம். இரு பரிசலோட்டிகளுக்கும் நன்றி சொல்லி
விடைபெறுகையில், நம் ஆங்கில நாளிதழாளர் இராமனைப்பாராட்டி, தோளோடு தோள் சேர்த்து
அன்பாக அணைத்து விடைபெற்றார்.
பவானிசாகர் கோட்டைக்கோயில்
கன்ராயன் மொக்கையிலிருந்து நாங்கள் பவானிசாகர்
அணைப்பகுதிக்கு வந்து அங்கிருந்த கோட்டைக்கோயிலைப் பார்த்தோம். அணை கட்டும்போது,
டணாயக்கன்கோட்டைக் கோயில்களில் இருந்த
சிற்பங்களை இங்கு கொண்டுவந்து தனிக்கோயில் கட்டி அதில் வைத்துள்ளனர். தகவல்
பலகையின்படி மாதவப்பெருமாள் கோயிலும், சோமேசுவரர் கோயிலும் டணாயக்கன் கோட்டையில்
இருந்துள்ளன என அறிகிறோம். பயணத்தின் இறுதிக்கட்டமாகச் சத்தியமங்கலத்தில்
நல்லுழவர் இராமசாமி அவர்களிடமும் நாளிதழ் நண்பர் தர்மராஜ் அவர்களிடமும்
விடைபெற்றுக் கோவை திரும்பினோம்.
வரலாற்றுச் செய்திகள்
தண்டநாயக்கர்கள்
டணாயக்கன் கோட்டை மாதப்ப தண்டநாயக்கன் என்பவரால்
கட்டப்பட்டது. இந்த தண்டநாயக்கர்கள் யார்? கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில்
வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும்
குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி.
1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி
முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின்
தலைவர்களாக இந்தத் தண்டநாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். இவர்களில் பெருமாள் தண்ட
நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி
என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் நாயக்கனுக்கு இரு மகன்கள்.
ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன்
மூன்றாம் வீரவல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன். மூன்றாம் வீரவல்லாளனின்
ஆட்சிக்காலம் கி.பி. 1293-1342. மாதப்ப தண்டநாயக்கனுக்கும் இரு மக்கள். ஒருவர்
கேத்தய தண்டநாயக்கன்; சிற்றப்பனின் பெயர் கொண்டவர். மற்றவர் சிங்கய தண்டநாயக்கன்.
தண்டநாயக்கர்கள் முடிகுலய குலத்தைச் சேர்ந்தவர்கள். மோடகுலய
குலம் என்றும் இக்குலத்தைச் சொல்வர். இவர்கள் தம் பெயருக்கு முன்னால் பல
விருதுப்பெயர்களை வைத்துக்கொண்டனர். அவற்றுள் இம்மடி இராகுத்தராயன், சிதகரகண்டன்
ஆகிய இரு பெயர்கள் முதன்மையானவை. ஒட்டைக்கு மிண்டான் என்னும் ஒரு விருதுப்பெயரும்
காணப்படுகிறது. தண்டநாயக்கர்கள் தமிழகத்தின் நீலகிரியைக் கைப்பற்றியதாகப் பெருமை
பேசுபவர்கள், என்னும் குறிப்பு உள்ளது. எனவே, நீலகிரிசாதார(ண)ன் என்னும்
விருதுப்பெயரும் இவர்களுக்கு உண்டு.
மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில்
டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம்
நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன்
கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில்
மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும்
ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில்
நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே
அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே,
டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும். நாம் பார்த்த, நீரில் மூழ்கிய கோட்டைக்கோயில் மாதப்ப
தண்டநாயக்கனின் மகனான கேத்தய நாயக்கன் என்பவன் கட்டிய கோயிலாகும். தன் தந்தையின்
பெயரால் மாதவப்பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினான்.
கல்வெட்டுச் செய்திகள்
1 டணாயக்கன் கோட்டைக்கோயில்
கல்வெட்டுகள்
டணாயக்கன் கோட்டைக்கோயில் கல்வெட்டுகள் தென்னிந்தியக்
கல்வெட்டுகள் தொகுதி 22-இல் உள்ளன. எத்தனை கல்வெட்டுகள், அவற்றின் பாடங்கள் யாவை
என்னும் செய்தி விளக்கங்கள் என்னிடம் இல்லை. நூலும் கிடைக்கவில்லை.தொல்லியல்
துறையினர் வெளியிட்டுள்ள கோவை, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலிலும்
டணாயக்கன் கோட்டைக்கல்வெட்டுகள் இடம்பெறவில்லை. அவை கிடைத்தபின்னர் செய்திகளை
இணைக்கலாம். தற்போது, நேரடியாகக் கோட்டைக்கோயிலில் நாம் பார்த்த கல்வெட்டுகளில்,
எனது முந்தைய பயணத்தின்போது பார்த்த கல்வெட்டில், “கேத்தெய நாயக்கர்” என்னும் பெயர்
காணப்படுகிறது. மாதப்ப தண்டநாயக்கனின் மகன் கேத்தய நாயக்கன் கட்டிய கோயில் இது
என்பது இதனால் உறுதியாகின்றது. அடுத்து, இரண்டாம் முறை சென்றபோது பார்த்த
கல்வெட்டு முற்றிலும் கிரந்த எழுத்துகளிலும் சமக்கிருத மொழியிலும்
எழுதப்பட்டிருப்பதால், முழுச் செய்திகள், அதாவது கோயில் கட்டப்பட்ட பிறகு நடைபெற்ற
பணிகள், அளிக்கப்பட்ட கொடைகள், கொடையாளிகள் ஆகிய செய்திகள் நமக்குத் தெரியவரவில்லை.
”ஸ்வஸ்திஸ்ரீ ஹரி : ஆத்ய” - கிரந்த எழுத்துகளில் |
”மஹாராயஸ்ய” - கிரந்த எழுத்துகளில் |
தண்டநாயக்கர்கள் பற்றிய பிற கல்வெட்டுகள் அவிநாசி,
கொழுமம், பாப்பினி ஆகிய ஊர்களின் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 189. AR 1909
அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 189. AR 1909
அவிநாசிக்கோயிலில், மாதப்ப தண்டநாயக்கன் தன் பெயரால் இம்மடி
இராகுத்தராயன் சந்தி என்னும் ஒரு சந்திப்பூசையையும், இம்மடி இராகுத்தராயன்
திருநாள் என்னும் வைகாசி விசாகத் திருநாள் விழாவினையும் ஏற்படுத்தி அவை நடந்தேறக்
கரைவழி நாட்டில் இருக்கும் தென்பள்ளி நத்தம் என்னும் சிதகரகண்ட நல்லூரைக் கொடையாக
அளிக்கிறான். கரைவழி நாடு என்பது இன்றுள்ள உடுமலை, கொழுமம் பகுதிகளைக்குறிக்கும்.
தென்பள்ளி நத்தம் என்னும் இயற்பெயர் அமைந்த ஓர் ஊரைத் தன் பெயரால்
சிதகரகண்டநல்லூர் எனப்பெயரிட்டுக் கொடையாக அளிக்கிறான். மேலும், அவிநாசியில் 2000
பணம் இட்டு புக்கொளியூர்க் குளம் வெடடுவித்து, குளத்தால் வந்த வருவாயை மேற்படி
சந்திக்கும் திருநாளுக்கும் செலவிடுகிறான். அவிநாசியில் தாமரைக்குளம், சங்கமன் குளம் ஆகிய இரு
குளங்கள் இன்றும் உண்டு. அவற்றில் சங்கமன் குளம் நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது
என வேறொரு கல்வெட்டின்மூலம் அறியப்படுகிறது. எனவே, தாமரைக்குளம் என்பது
மாதவப்பெருமாள் வெட்டுவித்த புக்கொளியூர்க் குளம் என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ப
இக்குளத்துக்கருகில் இருக்கும் மடம் ஒன்று புக்கொளியூர் மடம் என்று இன்றுவரை
அழைக்கப்பட்டுவருவதைச் சான்றாகக் கருதலாம். கல்வெட்டின் காலம் கி.பி. 1322.
இக்கல்வெட்டில், மூன்றாம் வீரவல்லாளனின் மேலாண்மையின்கீழ் மாதப்ப தண்டநாயக்கன்
இருப்பது புலப்படுகிறது. கல்வெட்டின் தொடக்கப்பகுதியிலேயே வீரவல்லாளன் பெயர்
குறிப்பிடப்பெறுகிறது.
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீமந் ப்ரதாபச்சக்ரவத்தி போசள புஜபல
வீரவல்லாள தேவற்கு
செல்லாநின்ற சகரயா
2 ண்டு ஆயிரத்திருனூற்றுநாலில் ..............
3 ............................ஸ்வஸ்திமந் மடிகோலய குல
கமள மார்த்தாண்ட இம்மடி
இராகு
4 த்தராய சிதகரகண்ட
..............................ஸ்வஸ்திஸ்ரீமனு மஹாப்ரதாந இம்மடி
இராகுத்தராயன்
5 பெருமாள் தண்ணாயக்கர் குமாரன் மாதப்ப
தண்ணாயக்கன் திருப்புக்கொளியூர்
அவினாசியாளுடைய நாயனாற்
6 கு நாம் விட்ட இம்மடி இராகுத்தராயன் சந்தி உதித்து
பன்னிரண்டாநாழிகையில்
சந்தி
ஒன்றுக்கு கோயிற் கா
7 லால் பதக்கு அரிசி அமுதுபடி .....தனால் வந்த
சாத்துப்படி பூச்சுப்படி பல
விஞ்சனமும்
கொண்டு ஸமாரா
8 தனை பண்ணவும் இம்மடி இரா(குத்த)ராயன் திருநாள் வைகாசி
விசாகம்
தித்தமாக்
திருநாள் எழுந்தருளிப் ப்போதவும் இது
9 க்கு இன்னாயனார் தேவதானமா(ன நில)த்தில்
நத்தமாய்க்கித் தென்பளி நத்தமான
சிதகரகண்டநல்லூ(ர்) நாம் நா
10 யனார்க்கு விட்டு குடியேற்றிந ....
இவ்வூர்..................
11 .....................
12
....................................................இவ்வூரில் முதலுள்ள
13 தும் நாம் புக்கொளியூர்(க்)குளம்
வெட்ட இரண்டாயிரம் பணம் இட்டு
வெட்டிவிக்கையில்
அவிநாசிக் கல்வெட்டு- க.வெ.எண். 793/2003. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள்)
மாதப்ப தண்ணாயக்கரின் இளைய மகன் சிங்கய தண்ணாயக்கர் அவிநாசிக்
கோயிலில் தன் தந்தை ஏற்படுத்திய சிதகரகண்டன் சந்திக்கும், திருநாளுக்கும், நித்த
நிமந்தங்களுக்கும் கரைவழி நாட்டிலிருக்கும் ஓர் ஊரை இறையிலி தேவதானமாக அளிக்கிறான்.
கல்வெட்டின் காலம் தெரியவில்லை; போசள அரசனின் மேலாண்மைக் குறிப்பும் இல்லை.
கல்வெட்டுப்பாடம் :
1 ஸ்வஸ்திஸ்ரீ மகபிரதானி இம்மடி (இராகு)த்தராயன் சிங்கய
தண்ணாயக்கர் அவிநாசி
ஆளுடையார்
கோயில் தானத்தார்க்கு நம் ஓலை குடுத்த தன்மமாவது நாயனார்
2 அவிநாசி யாளுடையார்க்கு சிதகரகண்டன் சந்திக்கும்
(சி)தக(ர)கண்டன்
திருநாளுக்கும் நித்த நிமந்தங்க(ளுக்கு)ம் உடலாக கரைவழி நாட்டு
.................
3 ......................................இறையிலி
(தே)வதானமாக குடுத்தோம் இவ்வூர் .................
கொழுமம் கல்வெட்டு- க.வெ.எண். 159. AR 1909
கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப
தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன் கரைவழி நாட்டின் ஒட்டைக்குமிண்டான்
என்னும் ஊரில் உள்ள நிலத்தைப் பிராமணர்க்குக் கொடைகொடுத்த செய்தியைக் கூறுகிறது. இவ்வூரின்
இயற்பெயர் தென்மூர். தண்டநாயக்கர்களின் ஒரு விருதுப்பெயரான ஒட்டைக்குமிண்டான்
என்னும் பெயரால் வழங்கியது. கல்வெட்டின் காலம் கி.பி. 1343.
கல்வெட்டுப்பாடம் :
1 சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1265 மேல் செல்லாநின்ற
ஸுபாநு சம்வத்ஸரத்து
........................... ஸ்வஸ்திஸ்ரீ சிதகரகண்ட
.....................................முடீகுலய
கமலமார்த்தாண்ட நீலகிரி சாதாரணன் ஸ்ரீமனு மஹாப்ரதாந மாதப்ப
தெண்ணாஆயக்கர்
கேஷ்ட குமாரரான ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய .... ...
யக்கற்கு
விஜயாத்புதயங்களாகவும் நம்முடைய சகலாபீஷ்ட ... ப்ராமணற்க்கு
பத்ரசாஸந
...............
கொழுமம் கல்வெட்டு- க.வெ.எண். 158. AR 1909
கொழுமம் சோழீசுவரர் கோயிலில் உள்ள இக்கல்வெட்டு, மாதப்ப
தண்டநாயக்கனின் மகன் கேத்தய தண்டநாயக்கன், மாதவச் சதுர்வேதிமங்கலம், தென்னவதரையச்
சதுர்வேதிமங்கலம் ஆகிய இரு சபையினர்க்குக் கொடையாக நிலக்கொடை அளிக்கிறான். கொடை
தன் நலத்துக்கும், தன் தம்பியான சிங்கயனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் வேண்டி
அளிக்கப்படுகிறது. கொடை நிலம் கரைவழி நாட்டின் அகரம்புத்தூரைச் சேர்ந்தது. கல்வெட்டின் காலம் கி.பி. 1345.
கல்வெட்டில் போசள அரசரின் மேலாண்மைக் குறிப்பில்லை.
கல்வெட்டுப்பாடம் :
1 ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1267 மேல் செல்லாநின்ற
பார்த்திவ சம்வத்ஸரத்து ......
....
மாதப்பதண்டநாயக்கர் ஜ்யேஷ்டகுமாரன் ஸ்ரீமனு மஹாப்ரதானந் கேத்தய
தண்டநாயக்கன்
னம்முடைய சகலாபிஷ்டஸித்யர்த்தம் ............... மாதவச் சதுர்வேதி
மங்கலத்து மஹாஜநங்களுக்கும்
தென்னவதரைய சதுர்வேதிமங்கலத்து மஹா
ஜநங்களுக்கும்
பத்ரசாஸநங் குடுத்தபடி ......................
2 கரைவழிநாட்டு ஒட்டைக்குமிண்டானில் ...............
பாப்பினிக் கல்வெட்டு- க.வெ.எண். 293/2004. (ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்)
காங்கயம் வட்டத்திலுள்ள பாப்பினியில் இருக்கு ஒரு
தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, காங்கய நாட்டார் நீலகிரி சாதாரன் கோடையில்
(இருக்கும்) நாயனார் மாதவப்பெருமாளுக்குப் பாப்பினி ஊரைக் கொடையாக அளிக்கிறார்கள்.
பாப்பினி ஊரின் பழம்பெயர் கொங்கரமாரி மாதவநல்லூர். கொங்கரமாரி என்பது
தன்டணாயக்கர்களின் விருதுப்பெயர்களுள் ஒன்று என அறிகிறோம். இக்கல்வெட்டில்
டணாயக்கன் கோட்டை பற்றிய நேரடிக்குறிப்பு காணப்படுகிறது. டணாயக்கன் கோட்டையின்
வேறொரு பெயர் நீலகிரி சாதாரன் கோட்டை. கல்வெட்டில் அரசர் குறிப்பில்லை.
காலக்குறிப்புமில்லை.
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ
2 நீலகிரி சா
3 தாரன் கோ
4 ட்டையில்
5 நாயனார் ஸ்ரீ
6 மாதவப்
7 பெருமாளுக்
8 குக் காங்
9 கய னாட்டா
10 ர் திருவி
11 டையாட்டமா
12 க விட்ட பா
13 ற்பனியான
14 கொங்கரமா
15 ரி மாத
16 வ நல்லூர்
முடிவுரை
டணாயக்கன் கோட்டை, வரலாற்று முதன்மை பெற்ற ஒன்று. போசளர் (ஹொய்சளர்) காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டையும், கோட்டைப்பகுதியில் இருந்த சோமேசுவரர் கோயிலும் கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியப் படைத்தாக்குதலுக்கு உள்ளாயின என்றும், முகமதியத் தாகுதல்களிலிருந்து மீண்ட போசளர் கோட்டையையும், கோயிலையும் புதுப்பித்தனர் என்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டவன் பல்லய தண்டநாயக்கன் என்றும் கூறப்படுறது. இவனுக்கு வலிய தண்டநாயக்கன் என்னும் பெயரும் உண்டு. தொல்லியல் துறையின் 1920-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில், கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியரின் தொடர்த் தாக்குதல்களால் கருநாடகத்தில் போசள அரசு சிதறுண்டபோது மூன்றாம் வீர வல்லாளன் (1292-1342), தமிழகத்தில் கொங்குமண்டலத்தின் ஒருமூலையில் தன் மேலாண்மையை நிலைநிறுத்தினான் என்னும் குறிப்பு உள்ளது. இவ்விரு தரவுகளையும் கொண்டு, டணாயக்கன் கோட்டை கி.பி. 1310 ஆண்டளவிலேயே இருந்துள்ளது என்று கருத வாய்ப்புள்ளது. எனில், கோட்டை எழுநூறு ஆண்டுகள் பழமைகொண்டது எனலாம்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் இக்கோட்டை பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயர்கள், மைசூர் அரசுக்குள் மதுவைக் கொண்டுவராவண்ணம் தடுக்கும் ஒரு தடுப்புச் சாவடியாக இக்கோட்டை விளங்கியது. மைசூர்ப் போர்கள் நடந்தபோது ஆங்கிலேயரும், திப்பு சுல்தானும் இப்பகுதியில் சந்தித்துள்ளனர் எனலாம். மைசூர் மண்ணின் மைந்தரான அரசு வழியின் தோன்றல் திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் சிறுவனாயிருந்த காரணத்தால் மைசூர் அரசி, அவனை சீரங்கப்பட்டணத்தின் அரங்கநாதர் கோயிலின் கோபுர நிலை மாடத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்ததையும், அரண்மனைக்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அந்த அரசி தன் அறையில் இருந்தவாறே சிறுவன் இருந்த மாடத்தைக் கண்காணித்து வந்ததையும், திப்பு சுல்தானிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் அரசியின் திட்டத்துக்கு டணாயக்கன் கோட்டைத் தலைவர்கள் துணையாயிருந்தனர் என்பதையும் கோவை ஈ. பாலகிருஷ்ண நாயுடு அவர்கள் தாம் எழுதிய “டணாயக்கன் கோட்டை” என்னும் புதினத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். டணாயக்கன் கோட்டையைப் பற்றியும், அதைப் பின்னணியாக வைத்தும் எழுதப்பெற்ற புதினம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.
தஞ்சைக்கோயிலோ, சிதம்பரம் கோயிலோ நாம் நினைத்தபோது செல்லலாம். ஆனால், வழிபட இறையுருவம் இல்லையெனினும், டணாயக்கன் கோட்டையை எண்ணியவுடன் சென்று பார்க்க இயலாது. பத்து ஆண்டுகளோ, மூன்று ஆண்டுகளோ பவானி ஆற்றில் நீர் வற்றினால் மட்டுமே இக்கோட்டையைப் பார்க்க இயலும். அவ்வாறான அரிய வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி வரலாறு தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்றோம். பரிசலோட்டி இளைஞன் இராமன் கூறியது இங்கே நினைவுக்கு வருகிறது. டணாயக்கன் கோட்டைக்கோயில் முழுதாக நீரில் மூழ்கியிருக்கும் நாள்களில் கோயில் கூரையின் மேல் அவனுடைய படகு செல்வதை அவன் உணரந்து மகிழ்ந்திருக்கிறான்.
நன்றி : திப்பு சுல்தான்- ஆங்கிலேயர் பற்றிய குறிப்புகள் உதவி
டணாயக்கன் கோட்டை, வரலாற்று முதன்மை பெற்ற ஒன்று. போசளர் (ஹொய்சளர்) காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டையும், கோட்டைப்பகுதியில் இருந்த சோமேசுவரர் கோயிலும் கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியப் படைத்தாக்குதலுக்கு உள்ளாயின என்றும், முகமதியத் தாகுதல்களிலிருந்து மீண்ட போசளர் கோட்டையையும், கோயிலையும் புதுப்பித்தனர் என்றும் புதுப்பித்தல் பணியை மேற்கொண்டவன் பல்லய தண்டநாயக்கன் என்றும் கூறப்படுறது. இவனுக்கு வலிய தண்டநாயக்கன் என்னும் பெயரும் உண்டு. தொல்லியல் துறையின் 1920-ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில், கி.பி. 1310 ஆண்டளவில் முகம்மதியரின் தொடர்த் தாக்குதல்களால் கருநாடகத்தில் போசள அரசு சிதறுண்டபோது மூன்றாம் வீர வல்லாளன் (1292-1342), தமிழகத்தில் கொங்குமண்டலத்தின் ஒருமூலையில் தன் மேலாண்மையை நிலைநிறுத்தினான் என்னும் குறிப்பு உள்ளது. இவ்விரு தரவுகளையும் கொண்டு, டணாயக்கன் கோட்டை கி.பி. 1310 ஆண்டளவிலேயே இருந்துள்ளது என்று கருத வாய்ப்புள்ளது. எனில், கோட்டை எழுநூறு ஆண்டுகள் பழமைகொண்டது எனலாம்.
திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் இக்கோட்டை பெரும் பங்கு வகித்தது. ஆங்கிலேயர்கள், மைசூர் அரசுக்குள் மதுவைக் கொண்டுவராவண்ணம் தடுக்கும் ஒரு தடுப்புச் சாவடியாக இக்கோட்டை விளங்கியது. மைசூர்ப் போர்கள் நடந்தபோது ஆங்கிலேயரும், திப்பு சுல்தானும் இப்பகுதியில் சந்தித்துள்ளனர் எனலாம். மைசூர் மண்ணின் மைந்தரான அரசு வழியின் தோன்றல் திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தில் சிறுவனாயிருந்த காரணத்தால் மைசூர் அரசி, அவனை சீரங்கப்பட்டணத்தின் அரங்கநாதர் கோயிலின் கோபுர நிலை மாடத்தில் மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்ததையும், அரண்மனைக்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த அந்த அரசி தன் அறையில் இருந்தவாறே சிறுவன் இருந்த மாடத்தைக் கண்காணித்து வந்ததையும், திப்பு சுல்தானிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் அரசியின் திட்டத்துக்கு டணாயக்கன் கோட்டைத் தலைவர்கள் துணையாயிருந்தனர் என்பதையும் கோவை ஈ. பாலகிருஷ்ண நாயுடு அவர்கள் தாம் எழுதிய “டணாயக்கன் கோட்டை” என்னும் புதினத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். டணாயக்கன் கோட்டையைப் பற்றியும், அதைப் பின்னணியாக வைத்தும் எழுதப்பெற்ற புதினம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.
தஞ்சைக்கோயிலோ, சிதம்பரம் கோயிலோ நாம் நினைத்தபோது செல்லலாம். ஆனால், வழிபட இறையுருவம் இல்லையெனினும், டணாயக்கன் கோட்டையை எண்ணியவுடன் சென்று பார்க்க இயலாது. பத்து ஆண்டுகளோ, மூன்று ஆண்டுகளோ பவானி ஆற்றில் நீர் வற்றினால் மட்டுமே இக்கோட்டையைப் பார்க்க இயலும். அவ்வாறான அரிய வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தி வரலாறு தருகின்ற மகிழ்ச்சியைப் பெற்றோம். பரிசலோட்டி இளைஞன் இராமன் கூறியது இங்கே நினைவுக்கு வருகிறது. டணாயக்கன் கோட்டைக்கோயில் முழுதாக நீரில் மூழ்கியிருக்கும் நாள்களில் கோயில் கூரையின் மேல் அவனுடைய படகு செல்வதை அவன் உணரந்து மகிழ்ந்திருக்கிறான்.
நன்றி : திப்பு சுல்தான்- ஆங்கிலேயர் பற்றிய குறிப்புகள் உதவி
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அடுத்ததாக சத்தியமங்கலம் கோட்டை பற்றி தகவல் திரட்டுவோம்.சத்தியமங்கலம் நடு நகரின் ஆற்றுப்பாலம் ஒட்டியவாறு கிழக்குப்பக்கமுள்ள பவானீஸ்வரர் கோயில் தொடங்கி மலைக்கோயில் வரை கோட்டை ஆற்றுக்கரையாக நீண்டுள்ளது.இதனுள் கோட்டை மினியப்ப சுவாமி கோயில் இன்றும் வழிபட்டுவரும்நிலையில் உள்ளது.ஆற்றுப்பாலத்தின் மேற்குப்பக்கம் காவல்நிலையம் தாண்டி வேணுகோபாலசுவாமி ஆலயம் உள்ளது.இதுவும் திப்புசுல்தான் கட்டியதாக தகவல்..சேகரிப்போம்.
Subscribe to:
Posts (Atom)